மகளிர் தினமான இன்று திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் சாதனைப் பெண்கள் குறித்த சிறப்பு தொகுப்பு..
“மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா” என்பது கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை பெண்மையைப் போற்றிப் பாடிய புகழ்பெற்ற கவிதை வரிகள். பெண்மையின் புனிதத்தையும், வலிமையையும், தடைகளைத் தகர்த்து சாதனை படைக்கும் பெண்களின் சிறப்பையும் இந்த வரிகள் உணர்த்துகின்றன. 1900-களின் தொடக்கத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் மற்றும் உரிமை கேட்டு அமெரிக்கப் பெண்கள் நடத்திய போராட்டமே மார்ச் 8 மகளிர் தினத்தின் தொடக்கமாகும். கிளாரா ஜெட்கின் என்பவரது முயற்சியால் 1911-ல் முதல் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சமூக, பொருளாதார, அரசியல் முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் இந்நாள், பெண் ஆற்றலை போற்றும் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
இதே போல திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களைப் பற்றிய சிறப்பு தொகுப்பு..
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெண்கள் ஆர்வமுடன் தபால் துறையில் வேலை செய்து வருகின்றனர். குறிப்பாக போஸ்ட்மேன் எனப்படும் தபால் விநியோக பிரிவில் ஆண்களை விட பெண்களே தற்போது அதிக அளவில் தபால் விநியோகம் செய்து வருகின்றனர். எனவே போஸ்ட்மேன் என்பதை விட போஸ்ட் வுமன் என்று குறிப்பிடுவது சரியாக இருக்கும் என பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் தபால் துறையில் பெருமளவில் ஆண்களை விடவும் பெண்களே அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.
இதே போல ஆட்டோ ஓட்டும் தொழிலும் ஏராளமான பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் நகர பகுதியான பிடாரி கோயில் தெருவில் வசிக்கும் திவ்யா கடந்த 8 மாத காலமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் குடும்பத்தில் மொத்தம் மூன்று பெண்கள். இவர் கடைசி பெண்ணாக இருந்து தன்னைத் தானே தன்னம்பிக்கை படுத்திக் கொண்டு ஆட்டோ ஓட்டும் பணியில் ஈடுபடுகிறார். மேலும் பல விமர்சனங்களை தாண்டி இந்த ஆட்டோ ஓட்டுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இவருக்கு காவல்துறையில் பணியாற்ற ஆசை இருந்தாலும், அந்த காக்கி சட்டைக்கு பதிலாக தபால் காக்கி சட்டையை அணிந்திருப்பது பெருமையாக இருக்கிறது என கூறுகிறார்
இவரைப் போலவே திருவாரூர் பிடாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் தமிழ்ச்செல்வி என்ற சாதனை பெண்மணி தனியார் துறையான அமேசான் பார்சல் சர்வீஸ் பணியில் கடந்த மூன்று வருடமாக பணிபுரிந்து வருகிறார். மேலும் இந்த பார்சல் பணியை தான் விருப்பப்பட்டு செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் பெண்கள் யாரும் வீட்டிற்குள் முடங்கி இருக்க வேண்டாம் அனைத்து துறைகளையும் சாதித்து வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பேட்டி : திவ்யா மற்றும் தமிழ்ச்செல்வி – சாதனைப் பெண்மணிகள்
















