தரங்கம்பாடி அருகே மகிமலை ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கான்கிரீட் கலவை
சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் கண்டனம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா காவிரி கடைமடை பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது மகிமலை ஆறு
மழைக்காலங்களில் உபரி நீர் வடிவதற்கும் இப்பகுதி விவசாயத்திற்கு பாசன ஆதாரமாகவும் இந்த ஆறு விளங்கி வருகிறது
இந்நிலையில் ஏற்கனவே மகிமலை ஆற்றில் ஆகாயத்தாமரைகள் அதிகளவில் படர்ந்துள்ளதால் மழைக்காலங்களில் நீரோட்டம் தடைப்பட்டு மழைநீர் வடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர்
தற்போது தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் மகிமலை ஆற்றில் அனந்தமங்கலம் அருகே சாலை வளைவு பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் அதிக அளவில் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தற்போது விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதிக அளவில் கான்கிரீட் கலவைகள் எடுத்துச் செல்லப்படுகின்றன
அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் போது எஞ்சிய கான்கிரீட் கலவைகள் அவ்வப்போது சாலை ஓரங்களிலும் இதுபோன்ற நீர்நிலைகளிலும் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது
மகிமலை ஆற்றில் கான்கிரீட் கலவையை கொட்டி ஆற்றை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உடனடியாக கான்கிரீட் கலவைகளை அகற்றி மகிமலை ஆற்றை தூர்வார வேண்டும் எனவும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

















