நீரூற்று போல் தரைக்கு உள்ளிருந்து குபு குபுவென பொங்கி வரும் பாதாள சாக்கடை கழிவு நீர்

நீரூற்று போல் தரைக்கு உள்ளிருந்து குபு குபுவென பொங்கி வரும் பாதாள சாக்கடை கழிவு நீர் – ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆழித்தேர் திருவிழா நாளை நடைபெற உள்ள நிலையில் ஆழித்தேருக்கு அருகிலேயே துர்நாற்றம் வீசும் அவல நிலை…

12 வருடங்களுக்கு முன்பு கடந்த 2014 ஆம் ஆண்டு திருவாரூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் நடைமுறைக்கு வந்தது. அது முதலே பாதாள சாக்கடை திட்டத்தால் திருவாரூர் பகுதி பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். திருவாரூர் தேரோடும் 4 வீதிகள், கமலாலய குளக்கரை, விஜயபுரம் கடைத்தெரு உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது பாதாள சாக்கடை நிரம்பி சாலைகளில் வழிந்து ஓடுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட கீழ சன்னதி தெருவில், நீரூற்று போல் தரைக்கு உள்ளிருந்து குபு குபுவென பாதாள சாக்கடை கழிவுநீர் பொங்கி வழிந்து ஓடுகிறது. குறிப்பாக தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு பால் வழங்கும் இடமான பால் டெப்போ வாசலில், நீரூற்று போல பொங்கி வரும் பாதாள சாக்கடையால் அப்பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் வியாபாரம் செய்யும் வணிகர்கள், பால் வாங்க வரும் முதியவர்கள், குழந்தைகள், பெண்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது மட்டுமில்லாமல் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆழித்தேருக்கு மிக அருகில், 50 மீட்டர் தூரத்தில், பூமிக்கடியில் இருந்து பாதாள சாக்கடை பொங்கி வருவதால் ஆழித்தேர் கட்டுமான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. உடனடியாக திருவாரூர் நகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழந்துள்ளது

Exit mobile version