முட்டம் கிராமத்தில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை குடும்பத்தினருக்கு அரசு வேலை  நிறைவேற்றக்கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கடந்த ஆண்டு கல்லூரி மாணவன் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை இழப்பீடு வழங்குவதாக அளிக்கப்பட்ட எழுத்துப்பூர்வ வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்:-

மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கடந்த 14.02.25 அன்று முட்டம் ஹரிஷ், மற்றும் கல்லூரி மாணவன் பேச்சாவடியைச் சேர்ந்த ஹரிசக்தி ஆகிய இருவர் சாராய வியாபாரிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். கள்ளச்சாராயம் விற்பனையை தட்டி கேட்டதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரம் அப்போது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. உறவினர்கள் பொதுமக்கள் கொலையான இளைஞர்களின் உடலை வாங்காமல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி போராட்டம் நடத்தினர். இந்த கொலை சம்பவத்தில் மூவேந்தன் தங்கதுரை ராஜ்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பத்தினருக்கும் தலா ஒருவருக்கு அரசு வேலை, இடம், இழப்பீடு பெற்று தருவதாக கூறி வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஹரிசின் தாயார் ரமா, ஹரி சக்தியின் தாயார் கௌரி ஆகியோர் வாக்குறுதியை நிறைவேற்ற கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு இயக்கம் மாநில ஒருங்கிணைப்பாளர் ராமதாஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் 40க்கும் மேற்பட்டோர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். எழுத்துப்பூர்வ வாக்குறுதியின் படி இரண்டு குடும்பத்தினருக்கும் தலா ஒருவருக்கு அரசு வேலை, குடியிருக்க இடம் வழங்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க வேண்டும், என்ற கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி முழக்கமிட்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல் ஆய்வாளர் சிவ செந்தில்குமார் தலைமையிலான போலீசார்
அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

Exit mobile version