9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் மறியல்: விழுப்புரத்தில் கைது.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் சுமார் 42 ஆயிரம் வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை அலுவலர்கள் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் அலுவலர்கள் திரண்டு போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் விழுப்புரம்–திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
பணிச்சுமை குறைப்பு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வு வழங்குதல், பணி பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் பணியமர்த்தும் அளவை 5 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்துதல் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த போராட்டத்தால் சில இடங்களில் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
