மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் நெய்தல் பண்பாட்டு அமைப்பு சார்பில் நடத்தப்படும் 4-வது புத்தகத் திருவிழா, தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வளாகத்தில் அறிவுத் திருவிழாவாக மிகக் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தொடங்கிய இந்தப் புத்தகக் கண்காட்சி, வரும் மார்ச் 8-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை வாசகர்களுக்காகத் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் காதலர்களைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட பிரம்மாண்ட புத்தக அரங்குகளில், தமிழ் மற்றும் ஆங்கிலத்தின் அரிய வகை இலக்கியங்கள் முதல் நவீன காலப் படைப்புகள் வரை லட்சக்கணக்கான புத்தகங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இது தவிர, கலைநிகழ்ச்சிகள், சிறியவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான விளையாட்டு அம்சங்கள் மற்றும் நாவூறும் உணவுத் திருவிழா எனப் புத்தகத் திருவிழா வளாகம் களைகட்டி வருகிறது.
நேற்று நடைபெற்ற 4-வது நாள் விழாவில், இலக்கியச் சொற்பொழிவுகள் பொதுமக்களைப் பெரிதும் கவர்ந்தன. இதில் நாகப்பட்டினம் தேசிய மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் வீ. இராஜராஜன் “கதை கதையாம்” என்ற தலைப்பில் மாணவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டும் வகையில் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, திருக்குறள் பேரவைத் தலைவர் முனைவர் சி. சிவசங்கரன் “அறிவை விரிவு செய்” என்ற தலைப்பில், வாசிப்புப் பழக்கமே ஒரு மனிதனை முழுமையாக்கும் என்பது குறித்து எழுச்சியுரை ஆற்றினார். விழாவின் ஒரு பகுதியாகப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களுக்கு, மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா நேரில் கலந்து கொண்டு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார்.
இந்த விழாவில் மாவட்ட நூலக அலுவலர் சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சட்டம்) அன்பழகன் மற்றும் மயிலாடுதுறை வட்டாட்சியர் சுகுமாரன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டத்தின் பண்பாட்டு அடையாளமாகத் திகழும் இந்தப் புத்தகத் திருவிழாவிற்கு, விடுமுறை நாட்களில் இன்னும் அதிகமான வாசகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்களின் அறிவுத் தேடலுக்குத் தீனி போடும் வகையில் அமைந்துள்ள இந்தப் புத்தகத் திருவிழாவைப் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
