நாடுமுழுவதும் ரயில்வேயில் போலிச் சான்றிதழ் சரிவர பரிசோதிக்கப்படாததால், பலர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்ற புகாரை தொடர்ந்து, ரயில்வே வாரியம் தீவிர நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளது.
அண்மையில், குரூப் ஏ பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஓர் அதிகாரி, தனது பணிக்காலத்தின் தொடக்கத்தில் சமர்ப்பித்த சாதிச் சான்றிதழ் போலியானது என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது போலவே பலரும் போலி எஸ்சி, எஸ்டி, ஓபிசி சான்றிதழ்களை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, ரயில்வே வாரியம் மாநில அரசு அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி, போலிச் சான்றிதழ் அளித்த ஊழியர்களை அடையாளம் காணும் பணியில் இறங்கியுள்ளது. ரயில்வே மண்டல அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில், அவர்கள் உடனடியாக ஊழியர்களின் சாதி சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை பரிசோதிக்க வேண்டும் என்றும், சந்தேகிக்கப்படும் ஊழியர்களுக்கு விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சாதாரணமாக, ஓர் ஊழியர் பணிக்கு சேர்ந்தவுடன் ஒரே மாதத்தில் அவரின் பின்னணி சரிபார்க்கப்படும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படாமல் வழிமுறைகள் தெளிவின்றி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ரயில்வே ஊழியர்கள் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும், வழக்கு நேர்மையாக நடக்க ரயில்வே நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இந்திய ரயில்வேயில் தற்போது 12.52 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். வேலைவாய்ப்பு வழங்கும் உலகின் மிகப்பெரிய அரசுத்துறைகளில் இந்திய ரயில்வே முக்கிய இடத்தை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.