மும்பை : அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனமான அதானி போர்ட் அண்ட் எஸ்இஜெட் லிமிடெட் (APSEZ), கடந்த வாரம் உள்நாட்டுக் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.5,000 கோடி நிதியை திரட்டியது. இந்த பத்திரங்கள் 15 ஆண்டுகள் வரை மாற்ற முடியாத வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கடன் பத்திரங்களை இந்திய வாழ்க்கை காப்பீட்டு கழகம் (எல்ஐசி) நிறுவனம் வாங்கியுள்ளது. இதற்காக, அதானி குழுமம் வருடத்திற்கு 7.75 சதவீத வட்டி வழங்க இருக்கிறது. மேலும், இந்தக் கடன் பத்திரங்கள் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவுள்ளன என்றும் அதானி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த முதலீட்டை எதிர்த்து மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“பணம், காப்பீடு, அதற்கான பிரீமியம் தொகை அனைத்தும் மக்களுடையது. ஆனால் அதனால் கிடைக்கும் பலன்கள், வசதிகள், பாதுகாப்பு அனைத்தும் அதானிக்கே ?
எல்ஐசி பொதுமக்களிடம் இருந்து காப்பீடு என்ற பெயரில் வசூலிக்கும் தொகை, ஒரு பொதுப் நிதி ஆகும். இந்தப் பணத்தை எடுத்துச் சென்று, ஒரே ஒரு தனியார் நிறுவனமான அதானி குழுமத்தில் முதலீடு செய்வது நியாயமற்றது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எல்ஐசி–அதானி தொடர்பான இந்த முதலீடு, பொது நிதி பயன்பாடு, நலன் மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.