தென்னிந்திய திரைப்படங்களுக்கு நன்றிக்கடன் – நடிகை ஜெனிலியா பதிலடி !

மும்பை : தென்னிந்திய திரைப்படங்களில் வலுவான பெண்கள் கதாபாத்திரங்கள் இல்லை என்ற விமர்சனத்திற்கு நடிகை ஜெனிலியா தகுந்த பதிலை அளித்துள்ளார்.

பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ஜெனிலியா, பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் சச்சின், வேலாயுதம், சந்தோஷ் சுப்ரமணியம், உத்தமபுத்திரன், சென்னை காதல் போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்ற சுறுசுறுப்பான பெண் கதாப்பாத்திரம், இன்றும் ரசிகர்கள் மனதில் உறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அமீர் கானுடன் நடித்துள்ள சித்தாரே ஜமீன் பர் திரைப்படம் வெளியாகும் முன்னோட்டமாக இடம்பெற்ற பேட்டியில், தென்னிந்திய சினிமாவில் பெண்களுக்கு வலுவான கதாப்பாத்திரங்கள் இல்லையா என்ற கேள்விக்கு, ஜெனிலியா நேரடி பதிலைத் தந்துள்ளார்.

“இதனைத் தெளிவாக மறுக்கிறேன். நான் தென்னிந்திய மொழிப்படங்களில் சிறந்த கதாப்பாத்திரங்களையே பெற்றிருக்கிறேன். அவை எனக்கு நடிப்பிலும் வாழ்க்கையிலும் பல விஷயங்களை கற்றுத் தந்தன. எனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்காக என்றும் நன்றிக்கடன்பட்டவளாக இருப்பேன்,” எனத் தெரிவித்தார்.

மேலும், ஹைதராபாத்தில் ஹாசினி, தமிழில் ஹரிணி, மலையாளத்தில் ஆயிஷா என தனது கதாப்பாத்திரங்கள் மக்கள் நினைவில் இருப்பதை பெருமையாக கூறிய ஜெனிலியா, ஷங்கர், ராஜமௌலி போன்ற முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம் தன்னை ஒரு பாக்கியசாலியாக மாற்றிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version