சென்னை:
சைவ மற்றும் வைணவ சமயங்கள், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த வழக்கு இன்று நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, பொன்முடிக்கு எதிராக வந்த 115 புகார்களில் 71 புகார்கள் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், அதனைத் தொடர்புடையவர்களுக்கு தகவலும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், 40 புகார்கள் முடிக்கப்பட்டது குறித்து தபால் மூலமாக, மேலும் 4 புகார்கள் ஆன்லைன் வழியாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, “புகார்கள் முடிக்கப்பட்டது தொடர்பாக அதற்குரிய ஒப்புதல் புகார்தாரர்களிடம் பெறப்பட்டதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், அனைத்துப் புகார்தாரர்களிடமிருந்தும் ஒப்புதல் பெறப்பட்டதாக பதிலளித்தார்.
இது தொடர்பான முழுமையான விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டதுடன், வழக்கை வரும் ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.