போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் முதல் நாளே கோட்டை விட்ட காவல்துறை – கடும் அவதி

போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் முதல் நாளே கோட்டை விட்ட காவல்துறை – கடும் அவதியில் வாகன ஓட்டிகள்..

திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேரோட்டம் உலக பிரசித்தி பெற்ற நிகழ்வாகும். தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தேரை வடம் பிடிக்க வருவது வழக்கம். நாளை நடைபெற உள்ள ஆழித்தேரோட்ட விழாவை முன்னிட்டு 1500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று மாவட்ட காவல்துறை தெரிவித்திருந்த நிலையில், தேரோட்டத்திற்கு முன்னதாகவே பக்தர்களும் பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

முறையான திட்டமிடல் இன்றி போக்குவரத்து சீர் செய்யாமல் காவல்துறையினர் அலட்சியமாக செயல்படுவதால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் வாகன நெரிசலில் காத்திருந்து பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பாகவே திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று பொதுமக்களுக்கும் ஆன்மீக பக்தர்களுக்கு போக்குவரத்து, குடிநீர், பொது கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடவும், எவ்வித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்திட வலியுறுத்தப்பட்டது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தேருக்கு முந்தைய நாள் இரவே கடும் போக்குவரத்து நெரிசலை பொதுமக்கள் சந்தித்துள்ளனர்.

2மணி நேர கூட்ட நெரிசலில் அவ்வழியே ரோந்து பணிக்கு செல்லும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாகனத்திற்கு மட்டும் வழி ஏற்படுத்தி சென்ற பின்னர் பொதுமக்களை கண்டுகொள்ளாமல் கண்காணிப்பாளரின் வாகனம் கடந்து சென்றது. இந்த செயல் வாகன ஓட்டிகளை கடும் எரிச்சல் அடைய செய்தது.

போக்குவரத்திற்காக தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து போக்குவரத்து காவலர்கள் 500க்கும் மேற்பட்டோர் போக்குவரத்தை சீர் செய்ய உள்ளதாக காவல்துறை கூறிய நிலையில் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவது காவல்துறை கவனத்திற்கு வரவில்லையா என கேள்வி எழுப்புகின்றனர்.

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் தீவிரம் காட்டும் காவல்துறை அதிகாரிகள் தேரோட்டத்திற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் சிரமமின்றி பயணிக்க போக்குவரத்தை மாற்றம் செய்வதை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version