மயிலாடுதுறை அருகே துண்டு பிரசுரம் கொடுத்து மதப் பிரச்சங்கம் செய்த இஸ்லாமியருக்கு நெற்றியில் பட்டை போட்டு காவி துண்டு அணிவித்த இந்து புரட்சி முன்னணி நிர்வாகியை பெரம்பூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்:-
மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிட்டப்பா நகரை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன்(66). இவர் சுற்று வட்டார பகுதிகளில் இஸ்லாமிய மதம் சார்ந்த நோட்டீஸ் கொடுத்து மதப் பிரசங்கம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2ம் தேதி பெரம்பூர் காவல் சரகம்
பண்டாரவடை கிராமத்தில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் உடையார் தெருவில் நோட்டீஸ் கொடுத்து மதப்பிரசங்கம் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த வழுவூர் கிராமத்தை சேர்ந்த இந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதிகுமரன்.48. என்பவர் ஷேக் அலாவுதீன் இஸ்லாம் மதப் பிரசங்கம் செய்வதை தடுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஜோதிகுமரன் ஷேக் அலாவுதீன் அணிந்திருந்த தொப்பியை கழற்றி, நெற்றியில் விபூதியை பூசி, காவி துண்டை கழுத்தில் அணிவித்து இந்து மதத்தை பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கூறியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக ஷேக் அலாவுதீன் பெரம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பி. என்.எஸ் விதியின் கீழ் 296(b), 196(1), 299, 352, 354, 351(3) ஆகிய 6 பிரிவுகளில் வழக்கு பதிந்து இந்து புரட்சி முன்னணி நிர்வாகி ஜோதி குமரனை கைது செய்து திருச்சம்பள்ளியில் கிராமத்தில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

















