மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் வானகிரி கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் ராபின், ராஜேந்திரன், சிவதாஸ், குழந்தைவேல், ரஞ்சித், ராஜ், கலை, குகன், பிரசாத்,அகிலன், ஆகாஷ், ராஜ்குமார் தரங்கம்பாடியை சேர்ந்த கோவிந்த், கடலூரை சேர்ந்த பாரதி ஆகிய 14 பேர் கடந்த 3 ஆம் தேதி தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்றுள்ளனர். இந்நிலையில் ஆழ்கடலில் தங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு பழுதடைந்ததால் அருகே உள்ள ஜெகதாம்பட்டினம் மீனவ கிராமத்திற்கு சென்று படகை சீரமைத்துள்ளனர். மீண்டும் அங்கிருந்து புறப்பட மீன்வளத்துறை அனுமதி கிடைக்க தாமதமானதால் சனிக்கிழமை அன்று ஜெகதாம்பட்டினத்தில் இருந்து தரங்கம்பாடி நோக்கி படகில் புறப்பட்டுள்ளனர். நடுக்கடலில் வரும் போது மீண்டும் படகில் பழுது ஏற்பட்டு காற்றின் போக்கில் படகு இலங்கை கடற்பரப்பிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் எவ்வித தொலை தொடர்பும் இல்லாமல் பழுது குறித்தும் தெரிவிக்க முடியாமல் தத்தளித்த மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக இலங்கை கடற்படையினரால் 14 மீனவர்களும் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த வானகிரி மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இது குறித்து வானகிரியை சேர்ந்த சிறைபிடிக்கப்பட்ட மீனவரின் தாய் கூறுகையில்,
வானகிரி பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 3 ஆம் தேதி தரங்கம்பாடி பகுதியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது விசைப்படகு பழுது ஏற்பட்டதால் அதனை ஜெகதாம்பட்டிணம் கொண்டு சென்று பழுது நீக்கம் செய்துள்ளதாக கிராம மக்களை தொடர்பு கொண்டு மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றபோது மீண்டும் படகு பழுது ஏற்பட்டதாக தகவல் வந்தது அதன் பிறகு மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை இதனிடையே இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக வானகிரி மீனவர்கள் கைது செய்யப்பட்ட தகவல் வந்துள்ளது.படகு பழுதால் திசைமாறி சென்ற 14 மீனவர்களையும் ஒரு கோடி மதிப்பிலான விசை படகையும் மீட்டுத்தர வேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
