மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றலாம் என்ற மதுரை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. அதோடு ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் கொண்ட அமர்வில் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் பகுதியில் பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து வீடுகள் தோறும் வண்ண கோலமிட்டு தீபம் ஏற்றினர். பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து கடவுள் முருகனுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி பாடல்களை பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

















