எம்.ஜி.ஆர். பெயரை சொல்லி அரசியலுக்கு வந்தால் மட்டும் போதாது; எம்.ஜி.ஆரின் கொள்கையையும் மக்கள் சேவையையும் பின்பற்ற வேண்டும்” என முதலமைச்சர் விஜயை அதிமுக விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பசுபதி கடுமையாக விமர்சித்தது பேச்சு.
விழுப்புரம்:-
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடல் மைதானத்தில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விழுப்புரம் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் பசுபதி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பேசிய பசுபதி, தனது உழைப்பும் லட்சியமும் அனைத்தும் அதிமுகவுக்காகவே என்றும், “நான் வீழ்ந்தாலும் பரவாயில்லை; அண்ணா திமுக வாழ வேண்டும்” என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அண்ணாவின் கொள்கை, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் வழியில் அதிமுக தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறிய அவர், எளிய தொண்டர்களும் கட்சியில் உயர்ந்த பதவிகளுக்கு வரக்கூடிய நிலையை உருவாக்கியவர் அண்ணா என புகழாரம் சூட்டினார்.
மேலும், அதிமுகவை எந்த தனிநபராலும், எந்த துரோகிகளாலும் அழிக்கவோ சிதைக்கவோ முடியாது என்றும் பசுபதி தெரிவித்தார். அதிமுகவை விலைக்கு வாங்கலாம் அல்லது சிதைக்கலாம் என நினைப்பவர்களின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்தார். எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி அரசியலுக்கு வருபவர்கள் முதலில் எம்.ஜி.ஆரின் கொள்கைகளையும் மக்கள் சேவையையும் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
எம்.ஜி.ஆர். இளைஞர்களை நல்வழிப்படுத்தியவர் என்றும், தாய்மார்களை தெய்வமாக மதித்தவர் என்றும் குறிப்பிட்ட பசுபதி, விஜய் தரப்பில் சமூக வலைதளங்களில் வெளியாகும் விமர்சனங்கள் மற்றும் அவரது குடும்ப விவகாரம் தொடர்பான பதிவுகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் பேசிய பசுபதி, சிறு மற்றும் குறு விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது, நீண்டகால கடனாக மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதிமுக தொண்டர்கள் உயிருக்கு உயிராக கட்சியுடன் இருப்பதாகவும், தங்கள் உயிர் உள்ளவரை கட்சியை காப்பாற்ற பாடுபடுவோம் என்றும் பசுபதி தனது உரையில் தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் குறித்து பசுபதி பேசுகையில்…
விஜய், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை அரசியலில் பயன்படுத்துவதாகவும், ஆனால் எம்.ஜி.ஆரின் அரசியல் கொள்கைகள் மற்றும் மக்கள் சேவையை பின்பற்றவில்லை என்றும் பசுபதி குற்றம்சாட்டினார். விஜய் நடித்த திரைப்படங்களில் வன்முறை, கஞ்சா, கத்தி உள்ளிட்ட காட்சிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்ட பசுபதி, இதுபோன்ற திரைப்படங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் இருப்பதாக விமர்சித்தார். எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் நடித்த காலத்திலேயே மக்களுக்கு உதவி செய்தவர் என்றும், பின்னர் அரசியலுக்கு வந்து மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் என்றும் கூறிய பசுபதி, விஜயை எம்.ஜி.ஆருடன் ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்ற கருத்தை முன்வைத்தார்.எம்.ஜி.ஆர். தாய்மார்களை தெய்வமாக மதித்தவர் என்றும், அவருடைய அரசியல் மற்றும் தனிப்பட்ட அணுகுமுறைகள் விஜயிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவை என்றும், விஜயின் குடும்ப விவகாரம் தொடர்பாக அவரது கட்சியைச் சேர்ந்த சிலர் சமூக வலைதளங்களில் இழிவான பதிவுகளை வெளியிட்டதாகக் குறிப்பிட்ட பசுபதி, அதற்கு விஜய் என்ன நடவடிக்கை எடுத்தார் என கேள்வி எழுப்பினார். அவர்களை கண்டித்து அறிக்கை வெளியிட்டாரா அல்லது கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினாரா என்றும் கேள்வி எழுப்பினார். அரசியலில் இருப்பவர்கள் தங்களது பேச்சு மற்றும் செயல்பாடுகள் மூலம் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றும், எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வந்தபோது மக்கள் நலனை முன்னிலைப்படுத்தினார் என்றும் பசுபதி வலியுறுத்தினார்.














