ஈரோடு மாவட்டத்தின் மிக முக்கியமான ஆன்மீகத் திருவிழாவாகக் கருதப்படும் கோபி அருகே உள்ள பாரியூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழா இன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் எரியும் நெருப்புத் தழலில் இறங்கி, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திய நிகழ்வு ஒட்டுமொத்தப் பகுதியையும் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
பிரசித்தி பெற்ற இக்கோயிலின் குண்டம் திருவிழா, கடந்த மாதம் 25-ஆம் தேதி காப்புக்கட்டுதல் மற்றும் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் மஞ்சள் ஆடை அணிந்து, கடுமையான விரதத்தைத் தொடங்கினர். கடந்த 2-ஆம் தேதி திருத்தேர் நிலை பெறுதல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து 5-ஆம் தேதி மாலையில் அம்மனுக்குச் சிறப்புச் சந்தனக் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. நேற்று காலை மாவிளக்கு ஊர்வலம் மற்றும் பூத வாகனக் காட்சியுடன் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் கலைகட்டின.
விழாவின் சிகர நிகழ்ச்சியான குண்டம் இறங்குவதற்காக, பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சுமார் 12 டன் விறகுகளைக் கொண்டு நேற்று இரவு குண்டம் திறக்கப்பட்டது. எரியூட்டப்பட்ட அந்த விறகுகள் தணலாக மாற்றப்பட்டு, விடிய விடிய ‘வீரமக்கள்’ என்று அழைக்கப்படும் தன்னார்வலர்கள் குண்டத்தைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 50 அடி நீளமுள்ள இந்த அக்னி குண்டம் தயார் செய்யப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ‘அம்மை அழைத்தல்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று காலை சரியாக 6 மணி அளவில், கோயில் தலைமைப் பூசாரி சிவநாதன் புனிதப் படைக்கலங்களை ஏந்தி வந்து, நந்தா தீபம் ஏற்றி குண்டத்திற்குச் சிறப்புப் பூஜைகளைச் செய்தார். “ஓம் சக்தி.. பராசக்தி” என்ற பக்தர்களின் விண்ணதிரும் முழக்கங்களுக்கு இடையே, தலைமைப் பூசாரி முதலில் தணலில் இறங்கி நடந்து சென்றார். அவரைத் தொடர்ந்து கோயில் பூசாரிகளும், நூற்றுக்கணக்கான வீரமக்களும் குண்டம் இறங்கினர்.
அதன்பின்னர், கடந்த இரண்டு நாட்களாகக் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கோயில் வளாகத்தில் காத்திருந்த லட்சக்கணக்கான பொதுமக்கள் வரிசையாகக் குண்டம் இறங்கினர். கைகளில் குழந்தைகளை ஏந்தியபடியும், உடல் முழுவதும் மஞ்சள் பூசியபடியும் பக்தர்கள் எரியும் நெருப்பில் எவ்வித அச்சமுமின்றி நடந்து சென்று அம்மனுக்குத் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ஈரோடு மாவட்டக் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
