மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்கு எதிர்ப்பு , காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி , வேட்பாளரை மாற்ற வேண்டும் எனவும் மயிலாடுதுறை எம்பி மாவட்டத்திற்குள் வந்தால் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிப்போம் எனவும் நிர்வாகிகள் பரபரப்பு பேட்டி :-
மயிலாடுதுறை சட்டமன்றத் தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனிடையே நீண்ட இழுபறிகளுக்கு பின்பு மயிலாடுதுறை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த ஜமால் முகம்மது யூனுஸ் நேற்று அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பியாக பதவி வகித்து வரும் சுதா வெளியூரிலிருந்து மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது மீண்டும் தொகுதிக்கு சம்பந்தமில்லாத ஒரு வேட்பாளரை காங்கிரஸ் தலைமை அறிவித்ததால் மயிலாடுதுறை மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கூறைநாடு பகுதியில் உள்ள காமராஜர் மாளிகையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வேட்பாளரை புறக்கணிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து அலுவலகத்தின் வாயிலில் மாவட்டத் துணைத் தலைவர் சிவராமன் தலைமையில் மயிலாடுதுறை வேட்பாளர் மற்றும் எம்பி சுதாவிற்கு எதிராக அக்கட்சி நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மண்ணின் மைந்தர்களை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் எனவும் , கட்சித் தொண்டர்களை மதித்து செயல்படாத எம்பிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் வட்டார தலைவர் அன்பழகன் இதுபோன்று வெளியூரிலிருந்து வேட்பாளர்களை அறிவித்ததால் நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாகவும் , கட்சித் தொண்டர்கள் அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறினார். இவ்வளவு நாள் உழைத்ததற்கு எந்த பலனும் இல்லை எனவும் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது கூறியதாவது :-
மயிலாடுதுறை தொகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், அவர்களில் யாரையும் பரிசீலிக்காமல் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராகத் தலைமை அறிவித்துள்ளதாகக் தெரிவித்தார்.
25 ஆண்டுகளுக்கு மேலாக வட்டாரத் தலைவராகவும், 50 ஆண்டுகளுக்கு மேலாகக் கட்சிக்காக உழைத்து வருபவர்களையும் புறக்கணித்துவிட்டு, அறிமுகமே இல்லாத ஒருவரை வேட்பாளராக நிறுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் சுதா அவர்கள், உள்ளூர் நிர்வாகிகளுடன் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு இந்த வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.கரூர் எம்பி ஜோதிமணி அவர்கள் கூறியது போல, தற்போது சட்டமன்ற இடங்கள் விலைக்கு விற்கப்படுவதோ என்ற சந்தேகம் தங்களுக்கு எழுந்துள்ளதாக நிர்வாகிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மண்ணின் மைந்தர்களில் ஒருவரை வேட்பாளராக அறிவிக்க வேண்டும். தலைமை உடனடியாக இந்த வேட்பாளரை மாற்றவில்லை என்றால், நாங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்துவோம். அந்த வேட்பாளருக்கு எவ்வித ஒத்துழைப்பும் வழங்க மாட்டோம். மேலும், எம்பி சுதா மயிலாடுதுறைக்குள் எங்கு வந்தாலும் அவருக்குக் கருப்புக் கொடி காட்டி எங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வோம் என கூறியுள்ளார்.

















