போபால் : “ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையிலிருந்து பல்வேறு முக்கிய பாடங்களை கற்றுள்ளோம். இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் தொடர்கிறது,” என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், “இந்தியா, புத்தர், மகாவீர் ஜெயின் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பூமியாக இருந்து வருகிறது. அனைவரும் அகிம்சையின் ஆதரவாளர்களே. இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால் அமைதியாக இருப்பது எளிதானது அல்ல,” என்றார்.
மேலும் அவர் தொடர்ந்து, “பாதுகாப்புப் படையினர் பண்டைய காலங்களில் இருந்தபோல அறிஞராகவும், போர்வீரராகவும் செயல்பட வேண்டிய சூழல் உள்ளது. ஆப்பரேஷன் சிந்தூர் என்பது வெறும் மாதிரி நடவடிக்கையாக அல்ல; இது நவீன கால மோதலின் ஒரு பிரதிபலிப்பு. அந்த நடவடிக்கையிலிருந்து பல்வேறு பாடங்களை கற்றுக்கொண்டு அவற்றில் பெரும்பாலானவை ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன. சில நடவடிக்கைகள் நடைமுறையில் அமல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆப்பரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது,” என திட்டவட்டமாக தெரிவித்தார்.