மாசி மகத்தை முன்னிட்டு காவிரி துலா கட்டத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரண்ட பொதுமக்கள். காவிரி ஆற்றில் நீர் வரத்து இல்லாததால் மக்கள் அவதி.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம்’ என்றும், தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள். மாசி மாதத்தில் வரும் பௌர்ணமியுடன் கூடிய மக நட்சத்திர நாள் தான் மாசி மகம். இந்நாளில் இந்துக்கள் விரதமிருந்து வழிபடுவர். மாசி மகத்தன்று தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்யும் போது பித்துருக்கள் தோஷம் நீங்கி முன்னோர்கள் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதன்படி மயிலாடுதுறையில் புகழ் பெற்ற புனித காவிரி ஆற்றின் துலா கட்ட தீர்த்த படித்துறையில் 16 புண்ணிய தீர்த்த கிணறுகள் அமைந்துள்ள இடத்தில் ஆயிரம்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து வழிபாடு செய்தனர். தர்ப்பணம் அளிப்பதற்கு முக்கிய காரணமாக விளங்குவது காவிரி நீர். காவிரியில் நீர்வரத்து இல்லாததால் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இது போன்ற விழாக்காலங்களில் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் உடனே துரிதமாக நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு பம்பு செட் மூலம் நீர்வரத்து செய்து கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

















