சென்னையில் இருந்து வேதாரண்யம் சென்ற ஆம்னி பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்தது..8-க்கும் மேற்பட்டோர் காயம்.. மருத்துவமனையில் அனுமதி.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே சாலை ஓர வாய்க்காலில் தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று இரவு புறப்பட்டு வந்தது. பேருந்தை திருஞானசம்பந்தம் என்பவர் ஓட்டி வந்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே தென்குடி பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டதும் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அலறி அடித்து உதவி கோரி கத்தியுள்ளனர். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அப்பகுதி பொதுமக்கள் மற்றும் நன்னிலம் காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
பேருந்துக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். இந்த விபத்தில் ஓட்டுநர் திருஞானசம்பந்தம், பயணிகளான மாலதி, பத்மினி, நிரோஜினி, கலா உள்ளிட்ட 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் இருந்து வேதாரண்யம் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து சாலை ஓர வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.















