பூம்புகாரில் கடற்கரையில் அதிகாரிகள் படகில் சென்று தேர்தல் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சுற்றுலா வளாகம் மற்றும் துறைமுகப் பகுதிகளில், சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பூம்புகார் தொகுதி தேர்தல் பொதுப் பார்வையாளர் சஞ்சய்குமார் சிங் யாதவ், காவல் துறை பார்வையாளர் பாஸ்கர் முகர்ஜி, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை ஈர்த்த அதிகாரிகள், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கி வைத்து, சுற்றுலா அனுமதிச் சீட்டுகளில் விழிப்புணர்வு வாசகங்களை அச்சிட்டு வழங்கி தேர்தல் இலச்சினையைத் திறந்து வைத்தனர்.
மேலும் பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அதிகாரிகளே படகில் கடலுக்குள் சென்று மீனவ வாக்காளர்களிடையே வாக்குரிமையின் அவசியத்தை எடுத்துரைத்தனர், பின்னர் கரைதிரும்பிய அதிகாரிகள் துறைமுகத்தில் மீனவர்களுடன் இணைந்து வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர்.
இந்த நிகழ்வு மூலம், வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டது.
