பரமக்குடியில் மூதாட்டியின் மர்ம மரணம் : நகைகள் மாயம் – வேலைக்கார பெண்ணிடம் போலீசார் விசாரணை

பரமக்குடி :
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பன்னீர்செல்வம் தெருவைச் சேர்ந்த இக்னேசியஸின் மனைவி ஞானசௌந்தரி (வயது 92), ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார். அவரது மகனும் மகள்களும் வெளியூரில் வசித்து வருவதால், அவர் பரமக்குடியில் தனியாகவே தங்கியிருந்தார். இந்நிலையில், அவரின் இல்லத்தில் கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த இலங்கை அகதியான அன்னலட்சுமி என்பவர் வேலைக்காரராக பணிபுரிந்து வந்தார்.

இன்று அதிகாலை, ஞானசௌந்தரி மரணமடைந்த நிலையில் படுக்கையில் கிடந்ததைவேலைக்கார அன்னலட்சுமி கண்டறிந்து, உடனடியாக அவரது உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பரமக்குடி டிஎஸ்பி சபரிநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டில் நடைபெற்ற ஆய்வின்போது, மூதாட்டி அணிந்திருந்த செயின், தோடு உள்ளிட்ட ஏழரை சவரன் நகைகள் மாயமானது தெரியவந்தது. இது தொடர்பாக வேலைக்கார அன்னலட்சுமியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூதாட்டியின் உடல், மரண காரணம் உறுதிப்படுத்த பிரேத பரிசோதனைக்காக இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த மர்ம மரணம் தொடர்பாக பரமக்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version