மயிலாடுதுறையில் “என் ஊர் என் கனவு” மாவட்ட தொலைநோக்கு திட்டம்- 2030 கருத்தரங்கம்:- அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்று, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தார்.
தமிழ்நாட்டில் “என் ஊர் என் கனவு” மாவட்ட தொலைநோக்கு திட்டம்- 2030 என்ற திட்டத்தின்மூலம், மாவட்ட அளவில் கருத்தரங்கத்தை நடத்தி பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சாதனையாளர்களை அங்கீகரித்து பாராட்டுவதோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், அலுவலர்கள், துறை சார் வல்லுநர்கள், அரசு சாரா நிறுவனங்கள், சேவை மனப்பான்மை கொண்ட தனிநபர்கள் தொழிலதிபர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஒன்றிணைத்து ஆலோசனை செயல்முறை மூலம் “மாவட்ட தொலைநோக்குத் திட்டம் 2030″ உத்தி மற்றும் செயல் திட்டம்” தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடக்கி வைத்து, பல்வேறு தரப்பினரின் கருத்துகள், ஆலோசனைகள், கோரிக்கைகளை கேட்டறிந்தார். இவர்களின் கருத்துக்கள் “என் ஊர் என் கனவு 2030″ என்ற புத்தக வடிவில் தயாரிக்கப்பட்டு அரசுக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து, விளையாட்டுத் துறை, கல்வித்துறை, வேளாண்மைத்துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு அமைச்சர் நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினார். இதில், தாட்கோ தலைவர் இளையராஜா, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
