2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மதிமுகவும் தங்களை வலுப்படுத்தும் நோக்கத்தில் தீவிரமாக செயல்பட தொடங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம் செங்கோடம்பள்ளியில் நடைபெற்ற கட்சியின் 31-வது பொதுக்குழு கூட்டத்தில், கூட்டணியில் கூடுதல் தொகுதிகளை கேட்க வேண்டும் என வலியுறுத்தி முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கட்சியின் அவைத்தலைவர் அர்ஜூன்ராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 12 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்காக அதிக தொகுதிகள் வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளது.
துரை வைகோ வலியுறுத்தல்
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, “எங்களது ஆசைகளை கூட்டணியில் தெரிவித்துவிட்டோம். 12 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்கேற்ப தொகுதிகளை கேட்கிறோம். ஆனால் கூட்டணியின் பொது நோக்கங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் தான் முடிவெடுப்போம்,” என கூறியிருந்தார்.
தனிச்சின்ன கோரிக்கையும் ?
கடந்த முறை ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கு இடங்களில் வெற்றிபெற்ற மதிமுக, இந்த முறை அதிக தொகுதிகளோடு தனிச்சின்னம் கோரிக்கையையும் வலியுறுத்தும் எனத் தெரிகிறது. இது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
மதிமுகவின் தேர்தல் பயணம் – ஒரு பார்வை
1994-ல் திமுகவிலிருந்து விலகிய வைகோ, மதிமுகவைத் தொடங்கி, 1996-ல் முதல்முறையாக தேர்தலில் களமிறங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஜனதாதளம் ஆகியோருடன் கூட்டணி அமைத்து 177 தொகுதிகளில் போட்டியிட்டும் வெற்றி பெற முடியவில்லை. 5.8% வாக்குகள் கிடைத்தன.
2001-ல் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகி தனியாக 211 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக வெற்றிபெறவில்லை; வாக்கு சதவிகிதம் 4.7% என குறைந்தது.
2006-ல் அதிமுக கூட்டணியில் இணைந்த மதிமுக 35 தொகுதிகளில் போட்டியிட்டு 6 இடங்களில் வென்றது. வாக்கு சதவிகிதம் 5.9%.
2011-ல் அதிமுக 12 தொகுதிகள் மட்டும் வழங்க தயாராக இருந்ததால், மதிமுக தேர்தலை புறக்கணித்தது.
2016-ல் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தும் வெற்றி இல்லை (29 தொகுதிகள்).
2021-ல் திமுக கூட்டணியில் 6 தொகுதிகள் பெற்ற மதிமுக, உதயசூரியன் சின்னத்தில் நான்கு இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் மீண்டும் இடம் பிடித்தது.
2026க்கு முன் நடக்கும் யுக்திகள்..?
மதிமுக தொடர்ந்து திரும்பவும் தங்களை சட்டமன்றத்தில் உறுதி செய்துகொள்ள விரும்புகிறது. கடந்த தேர்தலில் நிதானமாக செயல்பட்ட வைகோ, இந்த முறை தந்தை வைகோவின் பின்னணி, பையன் துரை வைகோவின் முன்னணி என இரட்டையாளர் முயற்சி மூலம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. அதனால் வரும் தேர்தலில் மதிமுக எந்த யுக்தியை கையாளும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.