மனுஷி : “ஆட்சேபனைக்குரிய காட்சிகளை தெரிவிக்காவிட்டால் எடிட் எப்படி செய்ய முடியும் ?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை :

இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகை ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள மனுஷி திரைப்படத்தின் ட்ரெய்லர், வெளியான நாளிலிருந்தே வலியான கருத்துகளை தூண்டியது. “எங்க பேர எங்க விருப்பப்படி எழுத விடமாட்டீங்களா ?”, “சாதி, மதம், நிறம், வர்க்கம் உருவாக்கியிருப்பதை அறிவியல் மூலமா மாத்த விரும்புறேன்” போன்ற வசனங்கள் படத்தின் சமூக அரசியல் கோணத்தை வெளிப்படுத்தின.

இயக்குநர் வெற்றிமாறனின் ‘க்ராஸ் ரூட்’ நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், மனுஷி படத்தில் மாநில அரசை தவறாக சித்தரிப்பதும், கம்யூனிஸ்ட் கொள்கையை குழப்பும் வகையில் சில காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதுமாகக் கூறி, கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்சார் சான்றிதழ் வழங்கப்பட மறுக்கப்பட்டது.

இதையடுத்து, தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்ததை எதிர்த்து வெற்றிமாறன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஜூன் 4, 2025) நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கின் விசாரணையின் போது, “ஆட்சேபனைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்களை சென்சார் போர்டு தெளிவாக குறிப்பிடவில்லை” என வெற்றிமாறன் தரப்பில் வாதமிடப்பட்டது. இதற்கு பதிலளித்த சென்சார் போர்டு, “நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மற்றும் அரசியல் அவதூறாக காணப்படும் காட்சிகள் நீக்கப்பட வேண்டியவை. அவற்றை நீக்கியபின் சான்றிதழ் வழங்கப்படும்” என்றது.

இரு தரப்புகளின் வாதங்களை கேட்ட நீதிபதி ஆனந்தவெங்கடேஷ்

“ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எவை என்பதை தெரிவிக்காமல் விட்டால், எடிட்டிங் எப்படி செய்ய முடியும் ?” என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், சென்சார் போர்டு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த, வழக்கை ஜூன் 11ம் தேதிக்கு மாற்றி வைப்பு செய்யப்பட்டது.

Exit mobile version