தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக விளங்கும் எஸ்.எஸ். ராஜமௌலி, இந்திய சினிமாவை உலகளவில் உயர்த்தியவர் எனலாம். இவர் இயக்கிய பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து, வசூலில் ஆயிரம் கோடிகளை தாண்டிய சாதனையை படைத்தது. சுமார் 500 கோடி ரூபாய் செலவில் உருவான அந்த படம், இந்திய சினிமாவின் வரலாற்றில் புதிய அடையாளமாக இருந்தது.
தற்போது ராஜமௌலி, தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பெயர் அறிவிக்கப்படாததால் தற்காலிகமாக SSMB29 என்று அழைக்கப்படுகிறது. பிரமாண்ட இயக்குனரும் முன்னணி கதாநாயகனும் இணைவதால், ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.
இந்நிலையில், இப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் செலவில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இது இரண்டு பாகங்களாக எடுக்கப்பட இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகளவில் 120 நாடுகளில் இப்படம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், 1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் உருவாகும் முதல் தெலுங்கு திரைப்படம் என்ற பெருமையை பெற உள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி அறிவித்துள்ளார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரமாண்ட படத்திற்கு, ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம். கிரவாணி இசையமைக்கிறார்.