மதுரை, மே 16 :
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்துள்ள மாமன் திரைப்படம் இன்று தமிழகமெங்கும் வெகுஆர்வத்துடன் வெளியானது. இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பட வெளியீட்டை முன்னிட்டு, சூரியின் ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, மதுரை திருநகர் பகுதியில் அமைந்துள்ள தேவி கலைவாணி திரையரங்கில் உணர்வுப் பூர்வமான ஒரு நிகழ்வு நடைபெற்றது.
சூரி ரசிகர்கள் தனது ரசிகர் மன்றக் கொடிகளை ஏந்தியவாறு, பெண்கள் பால்குடங்களை தூக்கி, பட்டாசுகள் வெடித்து, மேளதாள ஒலியுடன் ஊர்வலமாக திரையரங்கம் வந்தனர். பின்னர், திரையரங்கின் முன்பாக வைக்கப்பட்டிருந்த சூரியின் பெரிய படத்துக்கு பாலாபிஷேகம் செய்து, தங்கள் ஆனந்தத்தை வெளிப்படுத்தினர்.
இந்த உற்சாகமான கொண்டாட்டங்கள் மாமன் படத்திற்கு ரசிகர்களிடையே உருவான எதிர்பார்ப்பை வெளிப்படுத்துகின்றன