லைகா நிறுவன வழக்கில் நடிகர் விஷாலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை :
நடிகர் விஷால் மீது லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக, நடிகர் விஷால் முன்பு சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் “கோபுரம் பிலிம்ஸ்” நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். பின்னர், அந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு விஷாலுக்காக செலுத்தியது. இதற்கிடையில், கடன் தொகை முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் வரை, விஷால் தயாரிக்கும் படங்களின் உரிமைகள் லைகாவுக்கு வழங்கப்பட வேண்டும் என இருபுறமும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

ஆனால், அந்த ஒப்பந்த நிபந்தனையை மீறி சில படங்களை வெளியிட்டதாக கூறி, பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்த உத்தரவிடக் கோரி லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

அதை விசாரித்த நீதிமன்றம், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ₹21.29 கோடி ரூபாயை 30 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த கோரி லைகா நிறுவனம் மீண்டும் மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி என். செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது லைகா நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹேமா ஶ்ரீனிவாசன், “விஷால் தற்போது சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்திற்காக அவருக்கு வழங்கப்படும் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய உத்தரவிட வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து, மனுவிற்கு பதிலளிக்க நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வரும் நவம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Exit mobile version