48 மணிநேரத்தில் நீக்குங்கள்… பாடகி கெனிஷாவுக்கு மிரட்டல் விடுத்தவர்களுக்கு சட்ட எச்சரிக்கை !

சென்னை : நடிகர் ரவிமோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கு இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ரவிமோகனும், பிரபல பின்னணிப் பாடகி கெனிஷாவும் சமீபத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் இணைந்து கலந்துகொண்டது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, ரவிமோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சமூக வலைதளங்களில் அறிக்கைகள் வெளியிடத் தொடங்கினர். இதனால் விவாகரத்து விவகாரம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இந்த விவகாரம் குறித்து இனி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கக்கூடாது என்று இருவருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த பிரச்சனையின் காரணம் பாடகி கெனிஷா என சமூக வலைதளங்களில் அவதூறாக விமர்சனங்கள் பரவத் தொடங்கின. இதனை தொடர்ந்து கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்திற்கு நான் காரணமல்ல. உண்மை விரைவில் வெளிவரும். அப்போது உங்களுக்கு தெரியும்,” எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவளுக்கு பாலியல் தொல்லை, ஆபாசக் கருத்துகள் மற்றும் கொலை மிரட்டல்களும் வந்துவந்ததாகவும் அதனை தாங்க முடியாத நிலைக்கு தள்ளிவிட்டதாகவும் பதிவிட்டிருந்தார்.

இதற்கிடையில், அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கெனிஷா வழக்கறிஞர் வழியாக சட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சமூக வலைதளங்களில் வெளியான வீடியோக்கள், புகைப்படங்கள், அவதூறு பதிவுகள் மற்றும் கருத்துக்களை 48 மணிநேரத்துக்குள் நீக்க வேண்டும், இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் பதிவுகள் அனுமதிக்கக்கூடாது என்றும், தொடர்ந்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கெனிஷா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version