பெங்களூரு : கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சி சேவைகளுக்கு வரும் ஜூன் 16ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஓலா, ஊபர், ரேபிடோ உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கும் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.
நாடு முழுவதும் சாலைகளின் இட நெருக்கடி மற்றும் வாகன நெரிசலைக் குறைக்க பொதுப் போக்குவரத்துக்கு மாற்றாக பைக், கார் உள்ளிட்ட தனியார் கட்டண சேவைகள் பெருகி வருகின்றன. இதனால் பைக் டாக்சி சேவைகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் இது வேகமாக வளர்ச்சி பெற்றது.
இந்த நிலையில், பிக் டாக்சி சேவைகள் சட்டபூர்வமானதா என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, நீதிபதி பி. ஷியாம் பிரசாத் ஆறு வாரங்களில் இந்த சேவையை நிறுத்த உத்தரவிட்டார். அந்த காலக்கெடு ஜூன் 15இல் முடிவடைவதால், ஜூன் 16 முதல் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
அந்த உத்தரவை எதிர்த்து, பல நிறுவனங்கள் மேல்முறையீடு செய்தன. இது பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ் மற்றும் நீதிபதி சி.எம். ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “கர்நாடகத்தில் 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் உரிய அனுமதி பெற்று டாக்சி சேவையை வழங்குகின்றன. ஆனால் 2 சக்கர வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்த முடியாது” என தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், “நாட்டின் பல மாநிலங்களில் பைக் டாக்சி சேவைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இரண்டு சக்கர வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் செய்தால் போதுமானது” என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூன் 24-க்கு ஒத்திவைத்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதுவரை, முந்தைய நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, ஜூன் 16 முதல் பைக் டாக்சி சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.
மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை இந்த தடை தொடரும் எனவும், இதனால் மாநிலத்தில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது