தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு மற்றும் மிக்க நடிப்பு திறமை கொண்ட ஃபஹத் பாசில் முதன்மையாக நடித்துள்ள புதிய திரைப்படம் ‘மாரிசன்’, நாளை திரையரங்குகளில் வெளியீடாக உள்ளது.
இந்த படத்தை சுதிஷ் சங்கர் இயக்கியிருக்க, வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார். நடிகர்கள் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு, ஒளிப்பதிவை கலைச்செல்வன் சிவாஜி கவனித்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவான ட்ராவலிங் திரில்லர் வகையை சேர்ந்த இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்துள்ளார்.
இந்நிலையில், படத்தை முன்னதாகவே பார்த்த நடிகர் கமல்ஹாசன், படக்குழுவை பாராட்டியுள்ளார். தனது பதிவில்,
மாரிசன் படத்தைப் பார்த்தேன். இது நகைச்சுவைக்கும், மனித மனதிற்கும் இடையில் சிரமமின்றி நடனமாடும் ஒரு படம். என்னை சிரிக்கவும், சிந்திக்கவும், பாராட்டவும் வைத்த இந்த மகிழ்ச்சிகரமான படைப்பிற்காக, குழுவினருடன் ஒரு அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். பார்வையாளராகவும் படைப்பாளராகவும் ஈர்க்கும் புதுமையான, உற்சாகமான சினிமா — மாரிசன்” என்று தெரிவித்துள்ளார்.