நிவாரண முகாமை நோக்கி வந்த காஸா மக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச்சூடு – பலர் உயிரிழப்பு !

காஸா :
ஹமாஸ் இயக்கம் நடத்திய தாக்குதலுக்குப் பதிலளிக்கும் வகையில், கடந்த 2023 அக்டோபர் 9ஆம் தேதி, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், காஸா பகுதிக்கு எந்தவொரு அத்தியாவசிய உதவிகளும் அனுப்பப்படாது என அறிவித்தார். அதன்படி, மின்சாரம், உணவு, எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.

இந்த முடிவால், காசா மக்கள் கடந்த இரண்டாண்டுகளாக கொடூரமான வாழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு கடைகள் பொருட்கள் இல்லாமல் இயங்க முடியாத நிலை. குறைந்தது 2 லட்சம் பேர் வீடுகளை இழந்து, குழந்தைகளுடன் தற்காப்புக்காக இடம் பெயர்ந்து வருகின்றனர்.

காசாவிலிருந்து வெளியேற கூட, வடக்கு எல்லையான எரிஸ் கடற்கரை வழி முடக்கப்பட்டதால், மக்கள் சிக்கிக்கொண்டுள்ளனர். அனுமதி இல்லாமல் வெளியேறும் முயற்சிகள் கட்டுப்பாடுகளால் தடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்ததின் விளைவாக, இஸ்ரேல், மிகக் குறைந்த அளவிலான நிவாரணப் பொருட்களை அனுமதிக்க ஒப்புக்கொண்டது. அந்தநிலையில், ராஃபா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க ஆதரவுடன் செயல்படும் “காஸா மனிதாபிமான அறக்கட்டளை” (Gaza Humanitarian Foundation – GHF) நிவாரண மையம், பசியால் தவிக்கும் மக்களுக்கு உதவியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த மையத்தை நோக்கி கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற 27 பாலஸ்தீனர்கள் மீது, இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களில் இது இரண்டாவது தாக்குதல் ஆகும்.

“பசியால் தவிக்கும் மக்களுக்கு உணவுக் கொடுத்து அழைத்து வந்து, பின்னர் படுகொலை செய்கின்றனர்” என்று காஸா ஊடகத் தொடர்பு அலுவலகம் இஸ்ரேலுக்கு எதிராக கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கான விளக்கமாக, இஸ்ரேல் ராணுவம், “தாக்குதல் நடத்தக்கூடிய சந்தேகத்திலுள்ள நபர்கள் மீது மட்டுமே தற்காப்புக்காகவே நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளது. மேலும், நிவாரண முகாமுக்கு வர வேண்டிய வழிகள் முன்கூட்டியே வரையறுக்கப்பட்டுள்ளன. அதை மீறுவோர் பாதுகாப்பு படைகளை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால், எச்சரிக்கைக்குப் பிறகு மட்டுமே துப்பாக்கிச்சூடு நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், உணவுக்காக உயிரை கையில் பிடித்து வருவோரை நோக்கி தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவது, உலக அளவில் மிகுந்த கண்டனங்களை உருவாக்கியுள்ளது.

Exit mobile version