சென்னை : தமிழகத்தின் தேசிய மரமாக விளங்கும் பனைமரம், இன்று ஒரு ஜாதியின் மரமாக வகைப்படுத்தப்படுவது எந்த நீதிக்கு ஏற்பென நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது அவர் கூறியதாவது :
“கள்ளுக் கடையை திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் பாதிக்கப்படும் என்பதால்தான் அதை மூடுகிறார்கள். உண்மையான காரணம் வேறு ஏதும் இருந்தால் சொல்லுங்கள். புதுச்சேரியில் கள் விற்பனை நடைபெறுகிறது, ஆனால் தமிழகத்தில் மட்டும் அது போதைப்பொருளாகப் பார்க்கப்படுகிறது. இது ஏன்?”
மேலும்,
“பனைமரம் தமிழகத்தின் தேசிய மரம். ஆனால் இன்று அது ஒரு குறிப்பிட்ட ஜாதியின் அடையாள மரமாக மாற்றப்பட்டுள்ளதுபோல் பேசப்படுகிறது. நான் பனைமரத்தில் ஏறினால் அது ஜாதி அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. இதை எதிர்க்க வேண்டும்,” என ஆவேசமாகக் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழை பகுதியில் கடந்த ஜூன் 15ஆம் தேதி, பனைமரத்தில் ஏறி கள் இறக்கி, அதை பொதுமக்களுக்கு பகிர்ந்த சீமான், அந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டால் விசாரணையை எதிர்கொள்ளத் தயார் என்றும் உறுதியாக தெரிவித்துள்ளார்.