சென்னை :
டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை மேற்கொண்டு வரும் சோதனை குறித்து, தமிழக வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் டாஸ்மாக் மது விற்பனைக்கான முறைகேடுகள் தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் பல்வேறு இடங்களில் சோதனையை ஆரம்பித்தனர். இவ்விசாரணையின் ஒரு பகுதியாக, மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் முத்துசாமி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்ட பழைய வழக்குகளை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய தி.மு.க. ஆட்சியை கேள்விக்குள்ளாக்கும் நோக்கத்தில் தான் இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசு ஊழியர்களை துன்புறுத்தும் வகையில் அமலாக்கத்துறை செயல்படுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.