மாட்டிறைச்சி உண்பவருக்கு ராமர் கதாபாத்திரமா? ரன்பீர் மீது தொடரும் தாக்குதல்… ஆதரவளித்த சின்மயி!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகி வரும் ராமாயணா – தி இன்ட்ரோடக்‌ஷன்’ திரைப்படம், ரூ. 835 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இப்படம் இரண்டு பாகங்களாக உருவாக இருக்கிறது. முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாவது பாகம் 2027 தீபாவளியிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ரன்பீர் கபூர் – ராமர், சாய் பல்லவி – சீதை, யாஷ் – ராவணன், சன்னி தியோல் – அனுமன் ஆகிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசை அமைப்பில் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஸிம்மர் இணைந்து பணியாற்றுகின்றனர்.

இந்நிலையில், ராமர் வேடத்தில் நடிக்கும் ரன்பீர் கபூர் மீதான விமர்சனம் சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்துள்ளது. அவர் மாட்டிறைச்சி சாப்பிடுபவர் என்ற காரணத்தைக் குறிப்பிடும் இந்துத்துவ அமைப்பினர், அவரது தேர்வை கடுமையாக எதிர்க்கின்றனர். இதன் காரணமாக, ரன்பீர் தொடர்ச்சியாக சைபர் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார்.

இவ்விவகாரத்தில் ரன்பீருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் பாடகி சின்மயி. சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள தனது பதிவில்,

இந்த நாட்டில் கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு பாலியல் வன்கொடுமை செய்த பாபாஜி ஒருவர் ஓட்டுக்காக ஜாமினில் வெளிவர முடிகிறான். ஆனால் ஒருவர் சாப்பிடும் உணவே இவர்களுக்கு பெரிய பிரச்சனையாகத் தெரிகிறது.
என்று சாடியுள்ளார்.

முன்னதாக, சாய் பல்லவி மீதும் இப்படத்தில் நடிப்பதற்காக சில இந்துத்துவ பிரிவினர்கள் விமர்சனங்களை முன்வைத்தனர். அவர் படப்பிடிப்பு இடங்களில் அசைவ உணவு சாப்பிடுவதாகக் கூறி தாக்கல் செய்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தன.

தற்போது அந்த எழுச்சி, ரம்பீரையும் சூழ்ந்துள்ளது.

Exit mobile version