சென்னை :
தமிழக அரசின் உயர் கல்வித் திட்டங்களை கடுமையாக விமர்சித்துள்ள பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ், “புதிய பாடப்பிரிவுகளுக்கு ஒரு ஆசிரியரை மட்டும் நியமிப்பது எந்த வகையில் நியாயம் ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தரமான கல்விக்கு போதுமான ஆசிரியர்கள் தேவை
தமிழகத்தில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய பாடப்பிரிவுகள் இந்த கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளன. இப்பாடப்பிரிவுகளை நடத்த, தலா ஒரு கவுரவ விரிவுரையாளரை மட்டுமே நியமிக்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச தேவையும் புறக்கணிப்பு
ஒரு பாடப்பிரிவுக்கு குறைந்தது மூன்று ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது கல்வித் தரத்துக்கான அடிப்படை நிலையாக இருக்க, அதை அரசு புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது என அன்புமணி குற்றம்சாட்டினார்.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – ஆசிரியர்கள் குறைவு
57 அரசு கல்லூரிகளில் 203 புதிய பாடப்பிரிவுகள், 43 கல்லூரிகளில் 49 பாடப்பிரிவுகள் என மொத்தம் 252 பாடப்பிரிவுகள் அறிமுகமாக, 13,346 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கேற்ப ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை.
ஊதிய ஒதுக்கீட்டிலும் மறுப்பு
கல்லூரிக் கல்வி ஆணையம் 558 கவுரவ விரிவுரையாளர்களுக்கான ரூ.13.95 கோடி நிதியை கேட்டும், உயர்கல்வித்துறை வெறும் ரூ.6.30 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது கல்வியை ‘கத்தரிக்காய் பேரம்’ போல் மதிப்பிழைக்கிறது என அவர் விமர்சித்தார்.
புதிய கல்லூரி – புதிய கொள்கை ?
அண்மையில் தொடங்கப்பட்ட 11 புதிய அரசு கல்லூரிகளில், தலா 5 பாடப்பிரிவுகளுக்கு 12 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய கல்லூரிக்கு அதிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட, ஏற்கனவே உள்ள கல்லூரிகளுக்கு குறைவாக வழங்கப்படுவது எதற்காக? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.