2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 58வது லீக் ஆட்டம், தர்மசாலாவில் நடைபெற்ற டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியுடன் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இந்திய ராணுவம் தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் முக்கிய ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பதான்கோட்டியில் நிகழ்ந்த வான் வெளி தாக்குதல்களால், அதனுடன் அருகிலேயே — சுமார் 90 கிமீ தூரத்தில் — அமைந்த தர்மசாலா மைதானத்தில் போட்டி நடத்துவது குறித்து பலரிடையே அவசரமான கேள்விகள் எழுந்தன. இணையவழி கோரிக்கைகள், “வீரர்களும் ரசிகர்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டுமே!” என வலியுறுத்தின.
ஆனால், போட்டி திட்டமிட்டபடியே ஆரம்பமானது. முதலில் மழையால் டாஸ் தாமதமானது. பின்பு டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் 10.1 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மைதானத்தின் இரு கோபுர விளக்குகள் திடீரென அணைந்தன.
இது தொழில்நுட்ப கோளாறா ? அல்லது பாதுகாப்பு நடவடிக்கையா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், விளக்குகள் பாதுகாப்பு காரணமாகவே அணைக்கப்பட்டதென அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வந்தது. உடனடியாக வீரர்கள், நடுவர்கள் மற்றும் மைதானத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். போட்டி ஒழுக்கமாக ரத்து செய்யப்பட்டது. ரசிகர்கள் ‘பாகிஸ்தான் முர்தாபாத்’ என கோஷமிட்டபடி வெளியே சென்றனர்.
போட்டியை நிறுத்தியதற்கு காரணம் என்ன ?
தர்மசாலா கிரிக்கெட் சங்கமே போட்டியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணமாக தர்மசாலா அருகிலுள்ள காகர், காங்க்ரா மற்றும் சண்டிகர் விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால், வீரர்கள் எப்படி அப்பகுதியை விட்டு வெளியேறுவார்கள் என்பது கேள்வியாக உள்ளது.
BCCI அவசர ஆலோசனை – IPL தொடருக்கு என்ன நடக்கும் ?
இந்நிலையில், பிசிசிஐ சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, “நிலவரம் கடுமையானது. வீரர்களின் பாதுகாப்பு எங்கள் முக்கியக் கவலையா உள்ளது. ரயிலில் டெல்லிக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பதையும் அரசு ஆலோசனைகளையும் கவனித்து முடிவு எடுப்போம்” என தெரிவித்துள்ளார்.
வந்தேபாரத் ரயில் ஏற்பாடு – பாதுகாப்பு முதன்மை!
இந்நிலையில், பிசிசிஐ இரு அணிகளின் வீரர்கள், ஊழியர்கள் மற்றும் ஒளிபரப்புப் பணியாளர்களுக்காக சிறப்பு வந்தேபாரத் ரயிலை ஏற்பாடு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுமார் 300 பேரை பாதுகாப்புடன் அழைத்துச் செல்லும் இந்த ரயிலின் நேரமும், வழித்தடமும் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் என செய்திகள் தெரிவிக்கின்றன.