சென்னை: பிரபல பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRI) பயன்பெறக் கூடிய புதிய சேமிப்பு கணக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘என்ஆர்இ சேமிப்பு கணக்கு’ என்ற பெயரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த சேமிப்பு கணக்குகள், வெளிநாட்டு வருமானங்களை நிர்வகிக்கவும், பரிமாற்றங்களை எளிமையாக்கவும் வடிவமைக்கப்பட்டவை. இதற்காக இந்தியன் வங்கி புதிய ப்ரீமியம் டெபிட் கார்டுகளையும் வெளியிட்டுள்ளது.
இந்த திட்டங்களை, இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார், நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் அண்மையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
புதிய டெபிட் கார்டுகள் – IND D’Elite, IND Premium, IND Plus என மூன்று வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை,
- விமான நிலைய லவுஞ்ச் வசதி
- தனிநபர் விபத்து காப்பீடு
- பிரத்யேக லாயல்டி சலுகைகள் போன்ற வசதிகளை வழங்குகின்றன.
இதுகுறித்து பேசிய பினோத் குமார்,
“வசதி, பாதுகாப்பு மற்றும் மதிப்பை முன்னிலைப்படுத்தும் டிஜிட்டல் வங்கி சேவைகளை, உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்காக நாங்கள் தொடர்ந்து மேம்படுத்துகிறோம். NRI வாடிக்கையாளர்களுடன் வங்கியின் உறவை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இந்த புதிய சேமிப்பு திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன” என்றார்.
இந்த தகவல், இந்தியன் வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.