டெஸ்ட் கிரிக்கெட்டின் பரபரப்பை நிலைநாட்டும் வகையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டிகள் 2021 முதல் நடைப்பெற்று வருகின்றன. இதன் இறுதிப் போட்டிகள் எல்லாம் இங்கிலாந்திலேயே நடத்தப்பட்டுள்ளன. 2021-ல் சவுத்தாம்ப்டன், 2023-ல் ஓவல் மற்றும் சமீபத்தில் 2025-ல் லார்ட்ஸில் போட்டிகள் நடைபெற்றன.
இதேபோன்று, வரவிருக்கும் 2027, 2029 மற்றும் 2031 ஆண்டுகளுக்கான WTC இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்தும் திட்டத்தில் உள்ளது ICC. இதற்காக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்துடன் (ECB) புதிய ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு, செப்டம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் ICC யின் வருடாந்திர கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், “WTC இறுதிப் போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளிலும் சுழற்சி முறையில் நடைபெற வேண்டும்” என்ற கோரிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) முன்வைத்தது. குறிப்பாக, ஒருமுறை இந்தியாவிலும் WTC இறுதிப்போட்டி நடத்தப்பட வேண்டும் என்றது BCCI-யின் நிலைபாடு. இந்திய ரசிகர்களிடையிலும் இதற்கான வரவேற்பு அதிகமாகவே உள்ளது.
ஆனால், இந்த கோரிக்கையை ICC நிராகரித்துள்ளது. இதற்கான முக்கிய காரணம் – இங்கிலாந்து ஜூன் மாதத்தில் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற வானிலை அமையக்கூடிய நாடாக இருப்பது. கோடையின் துவக்ககட்டமான ஜூன் மாதம் இங்கிலாந்தில் மழையினால் போட்டி பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. வெப்பநிலை மிதமானதாக இருக்கும். இதனுடன் கூடுதலாக, அந்த நாடு முழுவதும் டெஸ்ட் போட்டிகளுக்கான ரசிகர்கள் ஆதரவு அதிகம் உள்ளது. முக்கியமாக, உலக தரமான மைதானங்கள், தளவாடங்கள் மற்றும் மேலாண்மை வசதிகளும் அதிகமுள்ள நாடாக இங்கிலாந்து இருக்கிறது.
இந்த அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, WTC இறுதிப் போட்டிகளுக்கு இங்கிலாந்தை தொடர்ந்தும் வரவேற்கும் முடிவை ICC எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.