புதுடில்லி : “ஓய்வுக்குப் பின் அரசுப் பதவிகளை ஒருபோதும் ஏற்க மாட்டேன்” என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உறுதியாக தெரிவித்துள்ளார். நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.
சமீபத்தில், சுப்ரீம் கோர்ட்டின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் பொறுப்பேற்றிருந்தார். அதன் பிறகு அவர், அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவம், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் பொது நலன் சார்ந்த பல்வேறு கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
அண்மையில், இங்கிலாந்து சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற வட்டமேசை கூட்டத்தில் உரையாற்றிய பி.ஆர். கவாய், “நீதித்துறையின் முழுமையான சுதந்திரம் முக்கியமானது. அதற்கு பதவிக்கால நிபந்தனைகள் மற்றும் நியமன செயல்முறைகள் சீராக இருக்க வேண்டும். நீதித்துறை அரசாங்கத்தின் அழுத்தம் மற்றும் செல்வாக்குகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருக்க வேண்டும்,” எனக் கூறினார்.
மேலும், “ஓய்வு பெற்ற உடனே தேர்தலில் போட்டியிடுவது அல்லது அரசு பதவியை ஏற்கும் நடவடிக்கைகள், நீதித்துறையின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிக்கக்கூடும். அதனால்தான், ஓய்வுக்குப் பின் அரசுப் பதவிகளை ஒருபோதும் ஏற்கமாட்டேன் எனத் திட்டவட்டமாக தெரிவிக்கிறேன்,” என்றார்.
நீதிபதிகளின் அறிவிப்புகளை பகிரங்கமாக வெளிப்படுத்தும் பிரத்யேக இணையதளத்தை நீதிமன்றம் பராமரிப்பதாகவும், தவறான நடத்தைகள், ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவற்றை சமாளிக்க, விரைவான மற்றும் வெளிப்படையான நடவடிக்கைகள் அவசியமானவை எனவும் அவர் வலியுறுத்தினார். நீதிமன்ற நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவது, பொதுமக்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கக்கூடிய முக்கியமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.