திருவண்ணாமலை :
பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் மற்றும் சமகால அரசியல் விவகாரங்கள் குறித்து விரிவாக பேசினார்.
ஜனாதிபதியின் 14 கேள்விகள் நியாயமானவை :
“இந்திய ஜனாதிபதி உச்ச நீதிமன்றத்தில் ஆர்டிகல் 143 ஐ பயன்படுத்தி எழுப்பிய 14 கேள்விகளும் நியாயமானவை. இதுவரை 15 முறை இந்த சட்டப்பிரிவை இந்திய ஜனாதிபதிகள் பயன்படுத்தியுள்ளனர். தற்போதைய 16வது முறை ஆகும். ஜனாதிபதி கேட்டுள்ள கேள்விகளில் எந்தவொரு தவறும் இல்லை. இது அவரின் ஜனநாயகப் பொறுப்புக்கேற்ப செய்யப்பட்ட ஒரு செயல்,” எனத் தெரிவித்தார்.
1991 நிகழ்வை மீண்டும் நினைவூட்டிய அண்ணாமலை :
“1991ல் கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு 25 டிஎம்சி தண்ணீரை வழங்க மறுத்த நிலையில், ஜனாதிபதி ஆர்டிகல் 143 ஐ பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு தண்ணீரை பெற்று தந்தார். அந்த நேரத்தில் அதை கொண்டாடிய அரசு, இப்போது அதே சட்டப்பிரிவின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளை எதிர்க்கும் போக்கு ஏற்கத்தக்கதல்ல. அப்போது இனித்தது, இப்போது ஏன் கசக்கிறது?” எனக் கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ் எப்போதும் எங்களோடு :
பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிலை குறித்து அவர், “எல்லோரும் எங்களுடன் தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ் எப்போதும் எங்களோடு தான் உள்ளார். எவரும் விலகவில்லை. கூட்டணி வலுவாகவே உள்ளது,” என்று கூறினார்.
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பா?:
அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்பு வழங்கப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “தற்போது நான் நிம்மதியாக இருக்கிறேன். ஆடு, மாடு மேய்த்து விவசாயம் செய்கிறேன். ஒருபுறம் கட்சிப் பணிகளையும் கவனிக்கிறேன். தேவையில்லாத வேலைகளில் சிக்காமல் குழந்தையாகவும், தந்தையாகவும், மகனாகவும் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கூண்டுக்குள் இருக்கும் கிளி போல நிம்மதியாக இருக்கிறேன். நமக்கான காலம் வந்தால் பறப்போம்,” என்றார்.