மயிலாடுதுறையில் சமய நல்லிணக்கத்திற்கு சான்றாக விளங்கும் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.பங்குத்தந்தை அருட்திரு.தேவதாஸ் இக்னேஷியஸ் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் கொடி பவனி நடைபெற்றது. உதவி பங்குதந்தை மனோஜ் சேவியர் அடிகளார் பவனியை வழிநடத்தினார். தஞ்சை மறைமாவட்ட வேந்தர் அருட்திரு.ஜோதி நல்லப்பன் அடிகளார் கொடியை புனிதம் செய்து புனித அந்தோணியார்களின் திருஉருவ கொடியை ஏற்றி திருவிழாவை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து, ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. “அழைப்பை ஏற்று அர்ப்பணிப்பு” என்ற இறைவார்த்தையை மையமாக வைத்து நடைபெற்ற திருப்பலியை புனித அந்தோணியார் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளியினர் பங்கு மக்களோடு இணைந்து சிறப்பித்தனர்.
இத்திருப்பலியில் உலக அமைதிக்காகவும், சமத்துவம் சகோதரத்துவம் தழைத்தோங்கவும் வேண்டி சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றன.இதில் விச்சூர் பங்குத்தந்தை அருட்திரு.ஆரோக்கியசாமி அடிகளார், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், அன்பிய குழுவினர், பாடகற்குழுவினர், இறைமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கொடியேற்றத்துடன் தொடங்கிய புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதில் தினமும் மாலையில் ஜெபமாலை, நவநாள் ஜெபம், மன்றாட்டுமாலை, திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.வருகின்ற 16-ஆம் தேதி மாலை 6 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து திருத்தேர் பவனியும் நடைபெற உள்ளது. 17-ஆம் தேதி காலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறவுள்ளன.
விழாவிற்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியார் திருத்தல பங்குத்தந்தை அருட்திரு.தேவதாஸ் இக்னேஷியஸ் அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் மற்றும் பங்கு மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
