மயிலாடுதுறையில் விநாயகர் சிலை தயாரிப்பு மையங்களில் வருவாய்த்துறையினர் திடீர் ஆய்வு:- அரசு விதிமுறைகளுக்கு மாறாக விநாயகர் சிலை தயாரிக்க தடைசெய்ய ரசாயன பவுடர் பயன்படுத்திய தயாரிப்பு மையத்துக்கு சீல்:- விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் பூட்டி சீல் வைத்துள்ளதாக இந்து அமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்:-
விநாயகர் சதுர்த்தி விழா ஆக.27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்து அமைப்பினர், பக்தர்கள் விநாயகர் சிலைகளை தயாரிப்பாளர்களிடம் ஆர்டர் கொடுத்துள்ளனர். விழாவிற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு விநாயகர் சிலைகளை தங்கள் பகுதியில் பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி, இரண்டு நாள்களுக்கு பின் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம். இந்நிலையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தவிர்க்க அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை விதித்துள்ளது. இந்நிலையில், மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தை கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா தலைமையில் வட்டாட்சியர் சுகுமாறன், காவல் ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அரசு விதிமுறைகளுக்கு மாறாக விநாயகர் சிலை தயாரிக்க தடைசெய்ய ரசாயன பவுடர் பயன்படுத்தப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வருவாய்த்துறையினர் விநாயகர் சிலை தயாரிப்பு மையத்தை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடவிடாமல் தடுக்கும் நோக்கில் வருவாய்த்துறையினர் பழிவாங்கும் நோக்கத்தோடு சிலை தயாரிப்பு மையத்தை பூட்டி சீல்வைத்துள்ளதாக கூறி மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


















