விழுப்புரம் அதிமுக அலுவலக சாவி ஒப்படைப்பு: புதிய மாவட்ட செயலாளர் பசுபதி அலுவலகத்தைத் திறந்து மாவட்டச் செயலாளர் இருக்கையில் அமர்ந்தார்.
விழுப்புரம் அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சி.வி. சண்முகம் விடுவிக்கப்பட்டு, அந்த இடத்திற்கு பசுபதி புதிய மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீண்ட நாட்களாக நீடித்து வந்த அலுவலக சாவி தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் முன்னிலையில் நடைபெற்ற சமாதான பேச்சுவார்த்தையில், அலுவலகத்தின் சாவியை சி.வி. சண்முகம் தரப்பு பாதுகாவலர் குணாவிடமிருந்து பெற்று, புதிய மாவட்ட செயலாளர் பசுபதியிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, சாவி முறைப்படி பசுபதி தரப்பினரிடம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய மாவட்ட செயலாளர் பசுபதி கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்து, அங்குள்ள தெய்வப் படங்களுக்கு மலர் தூவி வழிபட்டதோடு, தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி, சால்வை அணிவித்து பட்டாசு வெடித்து தனது பொறுப்பேற்பைக் கோலாகலமாகக் கொண்டாடினார்.













