தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) தொடர்பாகத் திமுக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நாடகம் என அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பா. சரவணன் கடுமையாகச் சாடியுள்ளார். மதுரையில் இன்று நடைபெற்ற அதிமுக மருத்துவ அணி விழாவில், 2026-ஆம் ஆண்டுக்கான காலண்டர்களைப் பொதுமக்களுக்கு வழங்கி அவர் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், “கடந்த 2021 தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் 51 மாதங்களாகக் காலங்கடத்திய முதலமைச்சர் ஸ்டாலின், இப்போது தேர்தல் நெருங்கும் வேளையில் அரசு ஊழியர்களை ஏமாற்றப் பார்க்கிறார். குறிப்பாக, மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தையே எடப்பாடியார் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பின்னரே, நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு அமல்படுத்தினார்கள். அதேபோல், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்தும் எடப்பாடியார் சட்டப்பேரவையிலும் வெளியிலும் தொடர் கேள்விகளை எழுப்பி வந்தார். தற்போது உளவுத்துறை அளித்த அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 75,035 வாக்குச்சாவடிகளிலும் அரசு ஊழியர்கள் திமுகவுக்கு எதிராகத் தயாராகிவிட்டனர் என்பதும், 2026-இல் எடப்பாடியார் மீண்டும் முதலமைச்சராக வருவது உறுதி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த அதிர்ச்சியில்தான் அவசர அவசரமாக இந்த அறிவிப்பைத் திமுக அரசு வெளியிட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார்.
மேலும் அத்திட்டத்தின் தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், “உண்மையான பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சம்பளப் பிடித்தம் கிடையாது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் 10 சதவீதப் பிடித்தம் பற்றிக் கூறப்படுகிறது. இது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயல். கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் இத்திட்டத்திற்காகத் தங்கள் பங்களிப்பைத் தெளிவாக அறிவித்துள்ளன. ஆனால், தமிழக அரசு 11 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று மொட்டையாகக் கூறுகிறதே தவிர, நிதி ஒதுக்கீடு குறித்து விளக்கம் அளிக்கவில்லை. வரும் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடனேயே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விடும் நிலையில், நிதி ஒதுக்கீடு இல்லாமல் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது” என விளக்கமளித்தார்.
அரசுப் பணியிடங்கள் குறித்துப் பேசிய டாக்டர் சரவணன், “ஐந்தரை லட்சம் காலிப் பணியிடங்களை நிரப்புவோம் என்று கூறிவிட்டு, இதுவரை வெறும் 70 ஆயிரம் இடங்களை மட்டுமே நிரப்பியுள்ளதாகக் கூறுவது அப்பட்டமான பொய். 16 லட்சம் அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை நான்கு ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது தேர்தலுக்காக வீசப்படும் திமுகவின் இந்த மாயவலையில் அரசு ஊழியர்கள் யாரும் விழமாட்டார்கள். வரும் 2026-இல் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி; அதுவே தமிழக அரசு ஊழியர்களின் பொற்காலமாக அமையும்” என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அதிமுக மருத்துவ அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
