இன்றைய டிஜிட்டல் யுகத்தில், திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் கசிந்து விடும் நிலை காணப்படுகிறது. இதனால், கோடிக்கணக்கில் செலவழித்து எடுக்கப்படும் படங்கள், போதிய வருமானம் ஈட்ட முடியாமல் நஷ்டத்தை சந்திக்கின்றன. இந்த பிரச்சனைக்கு அரசு மற்றும் திரைப்படத் துறையினர் பல நடவடிக்கைகளை எடுத்தாலும், இணையவழி திருட்டு தொடர்ந்துதான் வருகிறது.
இந்த சூழலில், திரைப்படங்களை இணையத்தில் சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்வதும், அதை பெருமையாக பகிர்வதும், மனதை சிதைக்கும் செயல் என நடிகர் சூரி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதளத்தில் அவர் கூறியுள்ளதாவது:
“ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கல்ல; அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த கூட்டு முயற்சி. ஒவ்வொரு படத்துக்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை மற்றும் அக்கறை ஒட்டியிருக்கின்றன. ஒரு படம் உருவாகும் பயணம் – கதையிலிருந்து படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என – உணர்வுகள் கலந்து கட்டியெழுப்பப்படுகின்றது.
படம் வெற்றிபெற்றாலும், தோல்வியடைந்தாலும், அது ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். அந்த பயணத்தின் மேல் சிலர் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிர்வது, கண்ணீர்க்குரிய செயல். அந்த ஒரு ‘வியூ’க்காக, யாரோ ஒருவரின் பல வருட உழைப்பை மிதித்துவிடும் செயல்.
திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதோடு, சமுதாய கருத்துகளை வெளிப்படுத்தும் கருவியாகவும் இருக்கின்றன. சில திரைப்படங்கள் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பாகவும் அமைகின்றன. இப்படியான தன்னலமற்ற உழைப்பை மதிக்காமல், திருட்டு பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதமல்லாமல் மனிதநேயத்தையும் கைவிடும் செயல்.
எனவே என் பணிவான வேண்டுகோள் – திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள். படங்களைத் தியேட்டர் அல்லது OTT ஆகிய முறையான வழியில் பார்த்து, படைப்பாளிகளின் உழைப்புக்கு மரியாதை செலுத்துங்கள். உங்கள் ஆதரவே அவர்களுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் பொறுப்புடன் நடந்து கொள்வதன்மூலம், திரையுலகத்தின் உயர்வுக்கு பங்களிக்கலாம்.”
இவ்வாறு நடிகர் சூரி தனது உணர்ச்சிபூர்வமான பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.