உறுதிமொழி கடிதம், டெபாசிட் பணம் உள்ளிட்ட அடிப்படை ஆவணங்களை மறந்து விட்டு வேட்புமனு தாக்கல் செய்ய வந்த தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் வீரமணி..
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகள் சார்பில் தீவிரமாக வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது. தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதன் வேட்பாளராக அன்பு. வி. வீரமணி என்பவர் அறிவிக்கப்பட்டிருந்தார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இரண்டு நாட்களுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தவருக்கு வேட்பாளர் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது, திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக தலைமை செய்த சமாதானத்தையடுத்து இன்று தமிழக வெற்றி கழக திருவாரூர் வேட்பாளர் வீரமணி வேட்புமனு தாக்கல் செய்வதற்காக திருவாரூர் ரயில் நிலையத்திலிருந்து, மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க பழைய பேருந்து நிலையம், பனகல் சாலை வழியாக தெற்கு வீதி பகுதிக்கு வந்த நிலையில், வேட்பாளர் உடன் செல்லக்கூடிய நான்கு நபர்கள் யார் என்பதில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேர தாமதத்திற்கு பிறகு தமிழக வெற்றிக்கழக தலைவர் மதன் தலைமையில் மூன்று நிர்வாகிகளுடன் வேட்பாளர் வீரமணி வேட்புமனு தாக்கல் செய்ய கோட்டாட்சியர் அலுவலகம் வந்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலருங கோட்டாட்சியருமான சத்யாவிடம் வேட்பு மனு தாக்கல் படிவத்தை கொடுத்த போது, அதில் உறுதிமொழி படிவம் இல்லாததை கண்டறிந்த தேர்தல் நடத்தும் அலுவலர் சத்யா இது குறித்து வேட்பாளிடம் கேட்டார். மேலும் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது டெபாசிட் செய்ய வேண்டிய பணத்தையும் எடுத்து வர தவெக வேட்பாளர் மறந்துவிட்டார். இதனால் ஒரு மணி நேர கால தாமதத்திற்கு பிறகு தவெக வேட்பாளர் வேட்புமனு செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதனால் தேர்தல் அதிகாரிகள் கடும் அவதி அடைந்தனர்.

















