டெல்டா மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்க நிலையில் இருப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டமே காரணம் எனவும் குற்றம் சாட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 73 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக மாவட்டம் முழுவதும் 184 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட நெல் மூட்டைகள் சுமார் 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் வரை குடோன்களுக்கு அனுப்பப்படாமல் தேங்கி கிடப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. மேலும், விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்ய கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து, மூட்டைகளாக அடுக்கி வைத்துள்ளனர். ஆனால் கிராம நிர்வாக அலுவலர்கள் பணி பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், சிட்டா அடங்கள் பெற முடியாமல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய விவசாயிகள் அன்பழகன், ராஜேஷ் கூறுகையில் கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் செய்து வருகின்றனர். சம்பா அறுவடை பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்திலுள்ள 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல் முட்டைகளை கொள்முதல் செய்வதற்காக கொண்டு சென்று அடுக்கி வைத்துள்ளனர். தற்போது நெல்லின் ஈரப்பதம் 17 என அரசு நிர்ணயத்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் நெல்லின் ஈரப்பதம் 16 15 என குறைந்துவிடும். நெல் மூட்டைகளின் எடையும் குறைந்து விடும். இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திப்பார்கள். தற்போது நெல்லை விற்பனை செய்தால் மட்டுமே வரவிருக்கும் குறுவை சாகுபடி பணிகளை தொடங்க முடியும், என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். உடனடியாக சிட்டா அடங்கள் வழங்க மாற்று அதிகாரிகளை நியமித்து, நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைத்துள்ள நெல் மூட்டைகளை குடோன்களுக்கு அனுப்ப வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
