‘‘குடும்ப கட்டுப்பாடு மேற்கொண்டதன் விளைவாக, தற்போது தமிழகத்திற்கு பார்லிமென்ட் தொகுதிகள் குறைவது போன்ற ஆபத்தான நிலை உருவாகியுள்ளது,’’ என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதல்வர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது :
‘‘நாட்டிலேயே முதன் முறையாக சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்த மாநிலம் தமிழகம். நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடும் மொழியாக வேண்டும் என்பது என் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத் தந்தவர் தலைவர் கருணாநிதி.
பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும். முன்னர் ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க’ என்று சொல்லப்படும் வாழ்த்தை இப்போது யாரும் சொல்லவில்லை. 16 குழந்தைகள் பெற்று கொள்ளக்கூடாது என்பதற்காக அதைப் பயன்படுத்த தயங்குகின்றனர். இது தவறான புரிதல்.
இன்றைய நிலையில், குழந்தைகள் அதிகமாகப் பிறக்கும் சூழல் மீண்டும் உருவாகி வருகிறது. மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு பார்லிமென்ட் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன. தமிழகம் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடித்ததனால், தொகுதி எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது,’’ என அவர் கூறினார்.