“தீய சக்தி–தூய சக்தி அல்ல… எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி” : அமைச்சர் ரகுபதி பதிலடி

புதுக்கோட்டை :
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுக அரசை விமர்சித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவை “தீய சக்தி” என்றும், தவெகவை “தூய சக்தி” என்றும் விஜய் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில், புதுக்கோட்டை மாவட்டம் வடவாளத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக பதிலளித்தார். அவர் பேசுகையில், “நாங்கள் தீய சக்தியும் இல்லை, தூய சக்தி பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. எங்களிடம் இருப்பது மக்கள் சக்தி. அந்த மக்கள் சக்தி என்றால் என்ன என்பதே விஜய்க்கு தெரியாது. சினிமா வசனம் போல தீய சக்தி, தூய சக்தி என்று பேசுகிறார்” என்றார்.

“விஜய்க்கு சிலப்பதிகாரம் கூட தெரியாது. எழுதிக் கொடுப்பவர்கள் சொல்வதைத்தான் அவர் பேசுகிறார். பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக் கொண்டதாக சொன்னால், அதுவே திராவிடக் கொள்கையை ஏற்றுக் கொண்டதாக அர்த்தம். ஆனால் உண்மையில் அவர் பாஜகவின் ‘சி-டீம்’ என்பதையே மக்கள் பார்க்கிறார்கள்” என்றும் அமைச்சர் விமர்சித்தார்.

அரசியல் அனுபவம் குறித்து பேசிய அவர், “ஆறு மாதம் அரசியல் நடித்துவிட்டு முதலமைச்சராகிவிடலாம் என்பதெல்லாம் சினிமாவில் நடக்கும். அரசியலில் அது சாத்தியமில்லை. எம்ஜிஆர் 1972-ல் கட்சி தொடங்கி, இடைத்தேர்தல் வெற்றிகளின் மூலம் தன் பலத்தை நிரூபித்தார். அதுபோல் விஜய் விக்கிரவாண்டி போன்ற இடைத்தேர்தலில் நின்று மக்கள் ஆதரவை காட்டியிருந்தால் பேசத் தகுதி இருந்திருக்கும். ஆனால் அவர் தேர்தலைக் கூட எதிர்கொள்ளவில்லை” என்றார்.

“எம்ஜிஆரையும் விஜயையும் ஒப்பிட முடியாது. விஜய் எந்த காலத்திலும் எம்ஜிஆராக முடியாது. சினிமா பாணியில் பேசுவதையே அவர் அரசியலாக நினைக்கிறார். தரம் தாழ்ந்து பேசுவது அவரின் அரசியல் பாணி. அதுபோல் நாங்கள் இல்லை” என அமைச்சர் ரகுபதி கூறினார்.

Exit mobile version